பதிவு செய்த நாள்
23
ஜூன்
2020
09:06
மாமல்லபுரம் : கர்நாடக மாநிலம், மைசூரு கோவிலில் நிறுவ, பிரமாண்ட ஆஞ்சநேயர் கருங்கல் சிலையை, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் வடித்தனர்.
மாமல்லபுரத்தில், சிற்பக் கூடங்கள் நிறைந்து, ஏராளமானோர் கலைத் தொழிலில் ஈடுபட்டு, கற்சிலைகள் வடிக்கின்றனர். தமிழக, வெளிமாநில, வெளிநாட்டு கோவில்களுக்கு, இங்கு கற்சிலைகள் வடிக்கப்படுகின்றன.அதன்படி, கர்நாடக மாநிலம், மைசூரு, சரவணா பலகோலா கோவிலில், பக்த ஆஞ்சநேயர் கற்சிலை, பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக, மாமல்லபுரம், தனியார் சிற்பக்கூடத்தில், 17.5 அடி உயரம், 4.5 அடி அகலம், பீடம், 4.5 அடி உயரம் என்ற அளவில், கருங்கல்லில், இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. இதை வடித்த, சிற்பக் கலைஞர் செந்தில்குமார், 43, கூறியதாவது:கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், கருங்கல்லில், சிலை வடிக்க துவங்கினோம். என்னுடன், மற்ற சிற்பிகளும் பணியாற்றினர். ஓராண்டிற்கும் மேல் பணி நடந்து, இப்போது முடித்துள்ளோம். சிலையின் எடை, 8 டன். பீட எடை, 2.5 டன். இவற்றின் மதிப்பு, 21 லட்சம் ரூபாய். மைசூருக்கு, விரைவில் அனுப்ப உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.