பதிவு செய்த நாள்
23
ஜூன்
2020
09:06
திருத்தணி : நம் நாளிதழில் வெளியான செய்தியால், திருத்தணி முருகன் கோவில் உண்டியல், 116 நாட்களுக்கு பின், நேற்று திறந்து எண்ணப்பட்டது.
திருத்தணி முருகன் கோவிலில், உண்டியல் மாத மாதம் திறந்து எண்ணப்படுகிறது. கடந்த பிப்.,26ம் தேதி, கடைசியாக முருகன் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதன்பின், மார்ச் மாதம் கடைசி வாரத்தில் உண்டியல் திறக்க, கோவில் நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது.ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மார்ச், 24ம் தேதி முதல், கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை. கோவில் உண்டியல் திறக்காததால், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் நோட்டுகள் சேதம் அடையும்.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, கோவில் நிர்வாகம், ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் அனுமதியுடன், நேற்று, 116 நாட்களுக்கு பின், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிசாமி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், உண்டியலை திறந்து, ரொக்கம், தங்கம், வெள்ளி என, தனித்தனியாக பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், உண்டியல் காணிக்கை, மூன்று நாட்களுக்கு, தினம், 50 ஊழியர்கள் சமூக விலகல் கடைப்பிடித்து, பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுவர் என்றார்.