பதிவு செய்த நாள்
23
ஜூன்
2020
10:06
சின்னசேலம் : சின்னசேலத்தில் உள்ள மர சிற்ப கலைஞர்கள் கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
சின்னசேலம் தாலுகாவில் 80க்கும் மேற்பட்ட மர சிற்ப கலைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வீடுகளிலேயே ஒரு பகுதியில் மர சிற்ப வேலைகளை செய்து வருகின்றனர். சுவாமி சிலைகள், உற்சவ வாகனங்கள் உள்ளிட்ட சிலைகளை செதுக்கி நேர்த்தியாக வடிவமைக்கின்றனர்.தற்போது ஊரடங்கு காரணமாக சிலைகள் செய்ய ஆர்டர்கள் ஏதும் வரவில்லை. செய்யப்பட் சிலைகளும் கோவில்களில் திருவிழாக்கள் தடைபட்டுள்ளதால் வாங்குவதற்கு யாரும் வரவில்லை. இதனால், போதிய வருவாய் இன்றி சிற்ப கலைஞர்கள் வறுமை நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து சின்னசேலத்தைச் சேர்ந்த மர சிற்ப கலைஞர் லட்சுமணன் கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளாக சின்னசேலத்தில் மர சிற்ப வேலைகளை செய்து வருகிறோம். சிற்ப வேலைகளுக்கு தேவையான மரங்களை மதுரை, தஞ்சாவூர், கடலுார் போன்ற மாவட்டங்களிலிருந்து வாங்கி சிலைகளை செய்கிறோம். மேலும் பல்வேறு சுவாமி சிலைகள் மற்றும் வீடுகளுக்கு தேவையான இன்டீரியர் வேலைகள், கம்ப்யூட்டர் ஸ்டிக்கர் கட்டிங் வேலைபாடுகள் போன்றவைகள் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தருகிறோம்.அவ்வாறு செதுக்கிய சிற்பங்களை உள்ளூர் தவிர சென்னை, டில்லி, பெங்களூரு, மைசூர் போன்ற பெரிய நகரங்களில் உள்ள வியாபாரிகள் ஆர்டரின் பேரில் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் திருவிழா காலங்களில் கோவில்களுக்கு தேவையான சிலைகளையும் வடிவமைத்து தருகிறோம்.தற்போது கொரோனா காரணமாக சிலைகளுக்கு தேவையான மரங்கள் வாங்க முடியாமலும், செய்த சிலையை விற்பனை செய்ய முடியாமலும் தவித்து வருகின்றோம். அரசு சார்பில் எங்களுக்கு எவ்வித நிவாரண உதவியும் இதுவரை வழங்கவில்லை. எங்களுக்கு இந்த தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால் செய்வதறியாது தவித்து வருகிறோம். எனவே, கடந்த 3 மாதங்களாக வேலையின்றி, வருமானமில்லாமல் வறுமையால் வாடும் மர சிற்ப கலைஞர்களுக்கு, நிவாரண உதவி வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.