பதிவு செய்த நாள்
14
மே
2012
10:05
உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் சித்திரை மாத சிறப்பு மாவிளக்கு பூஜை நடந்தது. குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் தசரா திருவிழா தமிழகத்தில் முதல் இடம் வகிக்கிறது. இங்கு சித்திரை மாத சிறப்பு நிகழ்ச்சியாக முதல் நாள் அதிகாலை விநாயகர் வழிபாடு, விநாயகர் வேள்வி, யானை வழிபாடு, மூலிகை வேள்வி நிறை அவி அளித்தல், மகா வல்லப விநாயகர் சிறப்பு நீராட்டுதல், அலங்கார தீப வழிபாடு, காலை 8 மணிக்கு ஒன்பது கோள் வேள்வி, பசு வழிபாடு, யாகசாலை பூஜை, அம்பாள் வேள்வி, சுவாமி வேள்வி, நிறை அவி அளித்தல், 1008 சங்குபூஜை, தீப வழிபாடு, சிறப்பு நீராட்டுதல், அலங்கார தீபவழிபாடு, தொடர்ந்து 1008 அம்பாள் போற்றி துவக்கமும், 1008 சுமங்கலி பூஜையும், 1008 அம்பாள் போற்றி ஆரம்பமும், அம்பாளுக்கும், சுவாமிக்கும் அலங்கார தீப வழிபாடும் நடந்தது. இரண்டாவது நாள் 1008 அம்பாள் போற்றி துவக்கமும், கடற்கரையில் இருந்து அம்பாளுக்கும், சுவாமிக்கும் 504 பால்குடம் எடுத்து திருவீதி உலாவும், யாகசாலை பூஜையும், அம்பாள் வேள்வி, சுவாமி வேள்வி, நிறை அவி அளித்தல், 504 பால்குடம், 1008 கலசம் ஆகியவை அம்பாள், சுவாமிக்கு நீராட்டுதல், அலங்கார தீப வழிபாடு நடந்தது. பின்னர் அம்பாள் சக்தி அலங்காரமும், 1008 அம்பாள் போற்றியும், 5004 மாவிளக்கு வழிபாடு நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு சிறப்பு மலர் முழுக்கு வழிபாடு நடந்தது. இரண்டு நாட்களும், காலை, மாலை, இரவு ஆகிய மூன்று நேரங்களும் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, மாதாந்திர மாவிளக்கு பூஜை விழாக் குழுவினர், சக்தி ஸ்ரீ அம்பிகை ஆகியோர் செய்திருந்தனர்.