1957ல் அன்னை தெரசா தொழுநோய் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். இதன் மூலம் இலவசமாக உணவு, மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கி வந்தார். இதற்கு “காந்தி பிரேம் நிவாஸ்” என பெயரிட்டார். ஒரு முறை போப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தான் பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு காரில் பயணம் செய்வதை அவர் விருப்பமில்லை என்றாலும் காரைப் பெற்றுக்கொள்ள மறுக்கவில்லை. புன்னகையோடு வாங்கிய அன்னை, மறுகணமே காரை ஏலம் விடுமாறு கோரிக்கை வைத்தார். அதில் கிடைத்த லாபத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இதைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். இதைப் போல தான் பெறும் பரிசுகளை எல்லாம் ஏலமிட்டு அறக்கட்டளை நிதியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.