பதிவு செய்த நாள்
26
ஜூன்
2020
01:06
சீதனப் பிரச்னையில் தடை ஏற்பட்டு திருமணம் முடியாத பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர். இவர்கள் தங்களின் பிரச்னை தீர, சென்னை மாங்காடு வைகுண்டவாசரை தரிசித்தால் மனசுக்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார்.
சிவனின் கண்களாக உலகிற்கு ஒளி தரும் சூரிய, சந்திரர் உள்ளனர். கைலாயத்தில் ஒருசமயம் சிவனின் கண்களை, பார்வதி விளையாட்டாக மூடவே உலகம் இருண்டது. உயிர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயின. இதனால் சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார். பூலோகத்தில் மானிடப் பிறப்பெடுத்த அம்பிகை, சிவன் தன்னைத் திருமணம் செய்ய வேண்டுமென தவத்தில் ஆழ்ந்தாள்.
இந்த சமயத்தில், அசுர குருவான சுக்கிராச்சாரியாரும் சிவனை வேண்டி தவமிருந்தார். மனைவியை விட பக்தனுக்கு முதலிடம் தந்த சிவன், சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். பிறகு அம்பிகைக்கும் காட்சியளித்து, காஞ்சிபுரம் சென்று தவமிருக்கும்படியும், அங்கு மணம் புரிவதாகவும் உறுதியளித்தார். அம்பிகை காஞ்சிபுரம் சென்று தவ வாழ்க்கையைத் தொடர்ந்தாள். அம்பிகையும், சுக்ராச்சாரியாரும் தவம் புரிந்த இடத்தில் மாமரங்கள் நிறைந்திருந்ததால் ‘மாங்காடு’ எனப் பெயர் வந்தது.
இந்த நேரத்தில் தங்கை பார்வதிக்காக வைகுண்டத்திலிருந்து மகாவிஷ்ணு சீர் கொண்டு வந்தார். மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்த போது, அம்பிகை காஞ்சிபுரம் சென்று விட்ட தகவலைத் தெரிவித்தார் மார்க்கண்டேய மகரிஷி. அத்துடன், மாங்காட்டில் மகாவிஷ்ணுவை தங்கும்படியும் கேட்டுக் கொண்டார். வைகுண்டவாசர் என்னும் திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளினார்.
ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காட்சி தரும் சுவாமியின் அருகில் மார்க்கண்டேயர் தியான நிலையில் உள்ளார். தங்கைக்கு திருமணச்சீராக பெருமாள் கொண்டு வந்த மோதிரம் வலது கையில் உள்ளது. கனகவல்லித்தாயார் தனி சன்னிதியில் இருக்கிறார். பிரகாரத்தில் ஆண்டாள், ஆஞ்சநேயர், திருக்கச்சிநம்பிகள், நம்மாழ்வார், ராமானுஜர், விஷ்வக்சேனர் சன்னிதிகள் உள்ளன. கோயில்களில் ஜெயன், விஜயன் என்னும் துவாரபாலர்களாக இருப்பர். ஆனால் இங்கு அவிரட்சகன், அக்னி என்னும் பெயரில் துவார பாலகர்கள் உள்ளனர். மாங்காடு காமாட்சியம்மன் கோயிலும், சிவன் சுக்ராச்சாரியாருக்கு காட்சி தந்த வெள்ளீஸ்வரர் கோயிலும் சற்று துாரத்தில் உள்ளன.
எப்படி செல்வது
சென்னை கோயம்பேட்டில் இருந்து 15 கி.மீ.,
விசேஷ நாட்கள்: வைகுண்ட ஏகாதசி,
நேரம் : காலை 6:30 – பகல் 1:00 மணி, மாலை 4:30 – இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 044 2627 2053, 2649 5883
அருகிலுள்ள தலம்: மாங்காடு காமாட்சியம்மன் கோயில்