உலகில் பிறந்த ஒவ்வொருவனும் மரணத்தைக் கண்டால் அஞ்சுகிறான். நூறு வயதை எட்டிப்பிடித்தவர்களுக்கு கூட இன்னும் பத்தாண்டு இருக்கலாமே என்ற எண்ணம் பிறக்கிறது. ஆனால், என்றாவது ஒருநாள் மரணித்தே தீர வேண்டும் என்கிறது பைபிள்.அன்றியும், ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத் தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது, என்பது ஒரு வசனம்.ஒரு குழந்தை தீர்க்காயுளுடன் வாழ வேண்டுமென்பதற்காக அவனது பெற்றோர் நித்தியன் (நிரந்தரமானவன்) எனப் பெயர் வைத்தனர். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும், தன் பெயருக்கேற்ப நிரந்தரமாக இந்த உலகில் வசிக்க ஆசைப்பட்டான்.ஒரு கல்லுடைப்பவனிடம் சென்று நான் நிரந்தரமாக வாழ வழி சொல்லேன் என்றான்.
பாறையை உடைத்துக் கொண்டிருந்தவன்,தம்பி! இந்தப் பாறை உடைபட நூறு வருஷம் ஆகும். அதுவரை வேண்டுமானால், நீ வாழலாம், என்றான்.இதனால், அவன் ஒரு மரம் வெட்டுபவனிடம் சென்றான். அவனும் சகோதரா! இங்குள்ள மரங்களை வெட்ட இருநூறு வருஷம் ஆகும். அதுவரை நீ இருந்தால் போதாதா! என்றான்.உடனே நித்தியன் ஒரு பெரியவரிடம் சென்று ஆலோசனை கேட்டான்.அவர் அவனிடம், இது ரொம்ப சாதாரண விஷயம். இதோ, இது என் குதிரை. இதை விலை கொடுத்து வாங்கிப்போ. இந்தக் குதிரையை விட்டு இறங்கவே செய்யாதே. இதில் இருந்து கீழே விழுந்து விட்டால் இறந்து விடுவாய். குதிரையில் இருக்கும் வரை நீ பூமியில் வாழலாம். இந்த குதிரைக்கும் அதுவரை மரணம் வராது, என்றார்.நித்தியன் குதிரையை வாங்கி, அதில் அமர்ந்து கொண்டான். அதில் இருந்தே சாப்பிடுவான். அதன் மேல் படுத்தே துõங்குவான். இப்படியே 500 வருஷம் வரை காலத்தை ஓட்டிவிட்டான்.ஒருநாள் ஓரிடத்தில் ஒரு வண்டி சகதியில் சிக்கி நின்றது. வண்டிக்காரன் குதிரையில் வந்த நித்தியனிடம், வண்டியை சேறில் இருந்து வெளியேற்ற உதவி கேட்டான். இவனும் குதிரையில் அமர்ந்தபடியே வண்டிச் சக்கரத்தைத் தள்ள, தடுமாறி விழுந்து விட்டான். சிறிது நேரத்தில் உயிர் பிரிந்து விட்டது.பூமியில் பிறந்து விட்டால் மரணம் நிச்சயம் வந்தே தீரும். அது எப்போது வந்தாலும், வரவேற்கும் மனப்பக்குவத்தை மட்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.