பதிவு செய்த நாள்
14
மே
2012
10:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்றிரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஏராளமான ரோடு முழுவதும் வரிசையாக நின்று தேங்காய் உடைத்து ஸ்வாமியை வழிபட்டனர். தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. நேற்றிரவு 7 மணிக்கு அமராவதி ஆற்றில் இருந்து கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கம்பத்துக்கு அமராவதி ஆற்றில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபராதனைகள் நடந்தது. இன்று முதல் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனைகள் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. 18 ம் தேதி பூச்செரிதல், 20 ம் தேதி காப்பு கட்டுதல், 28 ம் தேதி திருத்தேர், 30 ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குறிப்பாக, வரும் 27, 28, 29, 30 ம் தேதி ஆகிய நாட்களில் மாவிளக்கு மற்றும் பால்குடம் ஊர்வலமும், வரும் 28, 29 ம் தேதிகளில் அக்னி சட்டி, அலகு, காவடி ஊர்வலமும் நடக்கிறது. தொடர்ந்து 7 ம் தேதி பஞ்சபிரகாரம், 8 ம் தேதி புஷ்ப பல்லக்கு, 9 ம் தேதி ஊஞ்சல், 10 ம் தேதி அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.