பதிவு செய்த நாள்
05
ஜூலை
2020
03:07
திருப்பதி; திருமலையில், தமிழக அரசின் சார்பில், விருந்தினர் மாளிகை கட்டப்பட உள்ளது, என, அறங்காவலர் குழு உறுப்பினர், சேகர்ரெட்டி தெரிவித்தார்.
திருப்பதி திருமலையில், பல மாநில அரசுகளின் விருந்தினர் மாளிகைகள் உள்ளன. ஆனால், ஏழுமலையானை அதிக அளவில் தரிசிக்க வரும், தமிழக பக்தர்களின் பயன்பாட்டிற்காக, திருமலையில், தமிழக அரசு சார்பில், விருந்தினர் மாளிகை, ஓய்வறைகள் எதுவும் இல்லை. ஏழுமலையான் கோவில் உருவாக காரணமாக இருந்த, வைணவ குரு ராமானுஜர் அவதரித்த, தமிழகத்திலிருந்து வரும் பக்தர்கள், அறைகளுக்காக திருமலையில் திண்டாடி வருகின்றனர்.
எனவே, தமிழக பக்தர்களின் வசதிக்காக, திருமலையில், தமிழக அரசு சார்பில், விருந்தினர் மாளிகை, ஓய்வறைகள் கட்ட, தேவஸ்தானத்திடம் தமிழக அரசு சார்பில், விண்ணப்பம் அளிக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் திருமலையில் நடக்கவுள்ள, அறங்காவலர் குழு கூட்டத்தில், தமிழக அரசிடமிருந்து இதற்கான விண்ணப்பம் பெற்று, கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட உள்ளதாக, சேகர்ரெட்டி தெரிவித்தார்.டி.ஜி.பி.,யிடம் பரிந்துரைதமிழக பக்தர்கள் பலர், தமிழக அரசின், இ - பாஸ் பெற்று வந்தாலும், ஆந்திராவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருப்பதி திருமலை தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால், தமிழக அரசின், இ - பாஸ் பெற்று, ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களை, ஆந்திர எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என, ஆந்திர டி.ஜி.பி., யிடம் பரிந்துரை செய்ய உள்ளதாக, அறங்காவலர் குழுவின் உறுப்பினர் சேகர் ரெட்டி தெரிவித்தார்.