கோவை ; கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீண்டு, வெற்றிகரமாக வெளியே வர வேண்டும் என்று, குரு பவுர்ணமி விழாவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார். ஆதியோகியான சிவன், ஆதிகுருவாக மாறி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பகிர்ந்து கொண்ட நாள் குரு பவுர்ணமியாக கொண்டாடப்படுகிறது. குரு பவுர்ணமி தினமான நேற்று, இணைய வழியாக, சத்குருவின் சிறப்பு தமிழ் சத்சங்கம் நடந்தது.
இதில் சத்குரு பேசியதாவது: கொரோனா வைரஸ் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஐந்து லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.யோகா என்னும் நோய் எதிர்ப்பு சக்திக்கான பாதுகாப்பு கவசம் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். கவசம் வலுவாக இல்லாவிட்டால் எந்த மருத்துவர் வந்தாலும், எந்த மருந்தை உட்கொண்டாலும் அது வேலை செய்யாது. ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்தால் உங்களுக்கு வைரஸ் வந்துவிட்டால், என் உடலில் இருந்து மற்ற உடல்களுக்கு அதுபோக கூடாது என்ற ஒரு உறுதியை அனைவரும் எடுத்து கொள்ள வேண்டும். அனைவரும் உறுதி ஏற்றால், தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து முதலில் மீண்டு வர முடியும். இவ்வாறு, சத்குரு பேசினார்.
கொரோனா காலத்தில் நுரையீரல் திறனை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் விதமாக சிம்மக்ரியாஎன்ற 2 நிமிட எளிய யோகப் பயிற்சியை, சத்குரு வடிவமைத்துள்ளார். https://youtube/YCdTBT4Z8Gk என்ற முகவரியில் பார்க்கலாம்.