பதிவு செய்த நாள்
06
ஜூலை
2020
12:07
திருப்பதி: திருப்பதியில், ஜீயர்கள் சாதுர்மாசிய விரதம் துவங்கினர். ஆனிமாத சுக்லபட்ச ஏகாதசி அன்று, யோக நித்திரைக்கு செல்லும், மகாவிஷ்ணு கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி விழி திறப்பதாக ஐதீகம். அவர் யோக நித்திரைக்கு செல்லும், நான்கு மாத காலங்கள் சாதுர்மாசியம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாதங்களில், ஆச்சாரியர்கள், ரிஷிகள், முனிவர்கள் உள்ளிட்டோர் அதிகாலை எழுந்து புனித நீராடி யாகம், தவம், அனுஷ்டானங்கள் உள்ளிட்டவற்றை உலக நன்மைக்காக செய்வர். அதன்படி, குருபவுர்ணமியான நேற்று வைணவ மகாகுரு வழிவந்த , பரம்பரையை சார்ந்த திருமலை மடத்தின் ஜீயர்கள் சாதுர்மாசிய விரதத்தை துவங்கினர். அதிகாலையில் புனித நீராடி மடத்தில் கலசஸ்தாபனம் செய்து, பூஜை, விஷ்வக்சேனாராதனை, மேதினி பூஜை, ம்ருத்சங்ஹரணம் உள்ளிட்டவற்றை நடத்தி சாதுர்மாசிய விரத சங்கல்பம் செய்தனர். பின், திருக்குளத்தில், கால் நனைத்து, வராகஸ் சுவாமியை தரிசித்து, மங்கல வாத்தியம் முழங்க கோவில் வாசலுக்கு வந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தரிசனத்திற்கு அழைத்து சென்றனர். தரிசனம் முடித்து மடத்திற்கு சென்ற அவர்கள், பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்தனர்.