வடமதுரை: பிலாத்து ஓடைக்குள் சேதமடைந்த நிலையில் கிடக்கும் நந்தி, அம்மன் சிலைகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தினர். பிலாத்து மந்தை குளத்தில் நிரம்பும் நீர் தென்னம்பட்டி பெரிய கண்மாயை சென்றடைய ஓடை இணைப்பு உள்ளது. பிலாத்து கிராமத்தையொட்டிய கொடிக்கால் தோப்பு என்ற பகுதி ஓடைக் கரையில் தலைப் பகுதி சேதமடைந்த நிலையில் நந்தி, அம்மன் சிலைகள் கிடக்கின்றன. இப்பகுதி கோயிலுக்குள் இருந்த சிலைகளா அல்லது வேறு பகுதியில் கொண்டு வரப்பட்டதா என யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஏ.ரமேஷ் கூறுகையில், இங்குள்ள ஓடையில் இயந்திரம் மூலம் பராமரிப்பு செய்த போது வெளியே எடுக்கப்பட்டிருக்கலாம்.கேட்பாரின்றி சிதைந்த நிலையில் கிடப்பது வேதனையை தருகிறது. தொல்லியல் துறையினர் இதுபற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.