பதிவு செய்த நாள்
08
ஜூலை
2020
11:07
இஸ்லாமாபாத் : இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடி செலவில் ஹிந்து கோவில் கட்டப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. கோவில் கட்டுவது தொடர்பான விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய கொள்கை கவுன்சில்(சிஐஐ) ஆலோசனையை கேட்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஹிந்து கோவிலின் கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு அங்கு எதிர்ப்பு எழுந்த போதும், கட்டுமான பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அமர் பரூக் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாகிஸ்தான் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா காலித் மெக்மூத் கான் வாதாடியதாவது: கோவிலை கட்டுவதற்காக 2017 ஜன.,யில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலம் முறைப்படி 2018 ம் ஆண்டு ஹிந்து பஞ்சாயத்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், இந்த கோவில் கட்டப்படுகிறது. இந்த கோவில் கட்டுவதற்கு ரூ.10 கோடி செலவாகும். இந்த விவகாரம் பிரதமருக்கு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், சிஐஐ.,க்கு அனுப்பி வைத்தார். அரசியல் சட்டப்பிரிவு 20ன்படி, மதத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
தலைநகர வளர்ச்சி ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவிலுக்கான கட்டுமான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதன் பின்னர், வழக்கை தொடர்ந்தவரின் வழக்கறிஞர் ஆஜராகாததால், நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இதனிடையே, மதவிவகாரங்களுக்கான அமைச்சர் நூர் உல் ஹக் கத்ரி கூறுகையில், கோவில் கட்டுமானம் தொடர்பாக சிஐஐ.,க்கு கடிதம் எழுத உள்ளோம். அதற்கான வரைவு கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுப்பி வைக்கப்படும். கட்டுமானத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக சிஐஐ அமைப்பின் கருத்து மற்றும் ஆலோசனையை அரசு கேட்கும். மக்களின் பணத்தில் கோவில் கட்டப்பட வேண்டுமா அல்லது கூடாதா என்பதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.