பதிவு செய்த நாள்
09
ஜூலை
2020
12:07
புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் முதலாம் ஆண்டு, கும்பாபிஷேக தின சிறப்பு பூஜை இன்று நடக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடீயில், 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த 23.06.2019 அன்று சதய நட்சத்திரத்தில் நடந்தது.கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு தின விழா, இன்று, (9ம் தேதி) விமர்சையாக நடக்கிறது. இதில் பஞ்சஹூக்த ஹோமம், பாரமாத்மிக ஹோமம், பிராயச்சித்த ஹோமம், மூலமந்திர ஹோமம், கூஷ்மாண்ட் ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நடக்கிறது.
விநாயகர், ராமர், ஸ்ரீவாரி வேங்கடாசலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேய ஸ்வாமிக்கு, பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, விசஷே அலங்காரம், திருவாராதனம், சாற்றுமுறை, ப்ரம்மகோஷம் நடக்கிறது. உலக நன்மைக்காவும், கொரோனா வைரஸில் இருந்து விடுபடவும், மேற்கொண்டு பரவாமலும் இருப்பதற்காகவும், மக்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் இருப்பதற்காகவும் இந்த சிறப்பு பூஜை நடக்கிறது.பூஜைகளை ஸ்ரீமான் பாப்பாக்குடி உ.வே.வெங்கடேச பட்டாச்சாரியார் தலைமையில், வாசுதேவ பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், வேத விற்பன்னர்கள் நடத்துகின்றனர். பூஜைகள் அனைத்தும் பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டி நடத்துகிறது. பூஜையில் ஆலயத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.இந்த தகவலை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், பழனியப்பன் தெரிவித்துள்ளனர்.