பதிவு செய்த நாள்
09
ஜூலை
2020
02:07
துாத்துக்குடி; ஆதிச்சநல்லுாரில் நேற்று நடந்த அகழாய்வில், முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுார், சிவகளையில் மே, 25 முதல், மாநில தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணி நடக்கிறது. ஏற்கனவே, ஜி.பி.ஆர்., கருவிகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நிலத்தில், தற்போது தோண்டப்பட்டு பணிகள் நடக்கின்றன. ஆதிச்சநல்லுாரில் நேற்று தோண்டப்பட்ட பள்ளத்தில், ஒரே இடத்தில் பெரிய முதுமக்கள் தாழி உட்பட மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. ஒன்றில் மண் கிண்ணங்கள், தாங்கிகள் இருந்தன. மற்றொன்றில் எலும்புக்கூடுகள் இருந்தன. ௪ அடி உயரமுள்ள முதுமக்கள் தாழி, மூடியுடன் கண்டறியப்பட்டது. மூடி திறக்கப்படவில்லை. அதிலும், தொன்மையை பறைசாற்றும் பொருட்கள் இருக்கக்கூடும் என தெரிகிறது.