பதிவு செய்த நாள்
11
ஜூலை
2020
04:07
பல்லடம்: நாடு முழுவதும், மார்ச் 24 முதல் தொடர்ச்சியாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக, தொழில் துறையினர், கல்வி நிறுவனங்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி வழிபாட்டுக்காக கோவில்கள் திறக்கப்படாமல், திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்படாமலும், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி விழா, நடப்பு ஆண்டு ஆக., 22 அன்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். நோய் தொற்று அபாயம் கருதி, நாடு முழுவதும் ஊரடங்கு தொடர்ந்து வரும் சூழலில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, சிலை தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிலை தயாரிப்பாளர் பாலாஜி கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, ஒவ்வொரு ஆண்டும், ஜன., மாதமே சிலை ஆர்டர்கள் வர துவங்கும். ஆண்டுக்கு, 300 - 350 சிலைகள் வரை தயார் செய்து, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும். ஊரடங்கு தொடர்ந்து வருவதால், நடப்பு ஆண்டு, சிலை விவரிப்பு பணி இன்னும் துவங்கவில்லை. விழுப்புரம், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி பகுதிகளில் வடிவமைக்கப்படும் சிலைகளை, வர்ணம் பூசி விற்பனைக்கு தயார்படுத்துவது வழக்கம். ஊரடங்கு காரணமாக, பாண்டிச்சேரியில் மட்டும் சிலை தயாரிப்பு பணி நடந்து வருகிறது. அங்கிருந்து விற்பனைக்கு எடுத்து வர தயாராக உள்ளோம். நடப்பு ஆண்டு ஆர்டர்கள் கேட்டு பலரும் தொடர்பு கொள்கின்றனர். தமிழக அரசு உத்தரவு கிடைக்குமா என, எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.