பதிவு செய்த நாள்
12
ஜூலை
2020
01:07
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவிலை இடிக்க வந்ததாக கூறி, நெடுஞ்சாலைத்துறையினரை, இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையம் பிரிவில் இருந்து, சின்னமத்தம்பாளையம் கோட்டை பிரிவு வரை மேட்டுப்பாளையம் ரோட்டை நான்கு வழிச்சாலையாக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், பிரஸ்காலனி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, முருகன் கோவில் மற்றும் அதே பகுதியில் உள்ள வழிபாட்டு ஸ்தலம் ஆகியன ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி, இரண்டையும் அகற்றக் கோரி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று காலை மீண்டும் பிரஸ்காலனி பஸ் ஸ்டாண்டில் உள்ள, முருகன் கோவிலை இடிக்க, நெடுஞ்சாலைத்துறையினர் மண் அள்ளும் இயந்திரத்துடன் வந்தனர். இதற்கு, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை வடக்கு இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் கார்த்தி கூறுகையில், நெடுஞ்சாலைத்துறையினர், இதே பகுதியில் முருகன் கோவிலை மட்டும் இடிக்கவே, ஆர்வம் காட்டுகின்றனர், என்றார். மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி இன்ஜினியர் பிரசன்னா கூறுகையில்,முருகன் கோவிலின் முன் உள்ள பள்ளமான பகுதியை சரி செய்ய, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் வந்தனர். கோவிலை இடிக்க வரவில்லை, என்றார்.