நத்தம்: நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் திறக்கப்படாததால் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் 3 மாதத்திற்கும் மேலாக நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 1 முதல் விதிமுறைகளுடன் ஊரக பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்துதல், 6 அடி தூரம் இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல், எச்சில் துப்பதடை, சிலைகள், புனித நூல்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது, வழிபாட்டுத் தலத்திற்கு நுழையும் முன் கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், பஜனைக்கு அனுமதி கிடையாது, கோயிலில் அமர்ந்து பிரசாதம் உண்ணக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்திருந்தது. அறிவிப்பை அடுத்து கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மலைக்கிணர் சுப்பிரமணியசாமி கோயில், அருகில் பெரிய அளவில் குடியிருப்புகள் இல்லாத குன்றுகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு திருமணம் நடத்துவது வழக்கம். கந்த சஷ்டி, தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் மட்டும் அதிக அளவில் பக்தர்கள் இங்கு கூடுவர். பிற நாட்களில் குறைந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர். கோயில் அமைந்திருப்பது ஊரக பகுதியாக இருந்த போதிலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் இதுவரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படவில்லை. காலை மற்றும் மாலையில் ஒருமுறை மட்டும் பூஜை நடக்கிறது. விதிமுறைகளுடன் முருகனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என பக்தர்கர்ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈஸ்வரி சுவாமி பக்தை: திருமணம் மற்றும் குழந்தை வரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் கடவுளாக சுப்பிரமணியசுவாமி உள்ளார். பழநிக்கு அடுத்தபடியாக இக்கோயிலை முக்கிய வழிபாட்டுத் தலமாக கருதுகிறோம். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் அளவிற்கு கோயில் வளாகம் அதிக பரப்பில் உள்ளது. எனவே கோயில் திறக்க அனுமதிக்க வேண்டும்.
பொன்னையா வியாபாரி: கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இங்கு பூஜை பொருட்கள் கடை நடத்தி வருகிறோம். கோயில் திறக்கப்படாததால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வருவாயிழந்து உள்ளோம். பிற தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை கிடைப்பதில் சிரமம் உள்ளது. இங்குள்ள வியாபாரிகளின் நலன் கருதி கோயிலை திறக்க வேண்டும்.