பதிவு செய்த நாள்
15
ஜூலை
2020
03:07
அவிநாசி: உக்கிரம் நிறைந்த தெய்வமாக கருதப்படும், ஸ்ரீ சுடுகாட்டு காளியம்மன் சிலை, அவிநாசியில் உள்ள சிற்பக்கலைக்கூடத்தில் செதுக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் நேரு சுண்ணாம்பு சோலை பகுதியில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர், உக்கிர சக்தி நிறைந்ததாக கருதப்படும், சுடுகாட்டு மாகாளியம்மன் கோவில் சிலையை பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டனர். அச்சிலை, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள சிற்பக்கலைக்கூடத்தில், செதுக்கப்பட்டது. பணி முடிந்து, நேற்று ஓமலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: உக்கிர சக்தி நிறைந்த, சுடுகாட்டு காளியம்மன் சிலை, பெரும்பாலான கோவில்களில் வைக்கப்படுவதில்லை இச்காளியம்மன், மிகவும் கோபம் நிறைந்தவர். உரிய வழிபாட்டு முறைகளுடன் மட்டுமே, அந்த தெய்வத்தின் சிலையை கோவில்களில் பிரதிஷ்டை செய்ய முடியும். பெரும்பாலான சிற்பக்கலை கூடங்களில், இச்சிலை செதுக்கப்படுவதும் இல்லை. இந்த தெய்வத்தை வணங்கினால், குடும்பத்திலுள்ள பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. இவ்வாறு, அவர்கள் கூறினர். சிற்ப கலைக்கூட ஸ்தபதி ரங்கசாமி கூறுகையில், "நான்கு டன் எடையுள்ள ஒரே கல்லில், இரண்டு மாத காலம், இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது. மிகவும், சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படும் சுடுகாட்டு காளியம்மன் சிலையை செதுக்கியதில் திருப்தியடைகிறோம்," என்றார்.