பதிவு செய்த நாள்
16
ஜூலை
2020
10:07
திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து, திருமலை திருப்பதி பெருமாளுக்கு, வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்பட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் நம்பெருமாள், 40 ஆண்டுகள், திருமலை திருப்பதியில் இருந்தார். அதை நினைவுகூரும் வகையில், ஆனிவார ஆஸ்தான தினமான, ஆடி மாதம் முதல் நாளில், வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு வஸ்திர மரியாதை வழங்க, திருப்பதி தேவஸ்தானம், ஐந்து பேருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், திருமலை பெருமாள் மூலவர், உற்சவர், தாயார், ராமானுஜர் ஆகியோருக்கு வஸ்திரங்கள், மாலைகள், பழங்கள் மற்றும் மங்களப் பொருட்களை, கொண்டு சென்றனர்.இந்தப் பொருட்கள், இன்று திருமலை கோவிலில் சமர்ப்பிக்கப்படுகின்றன.