புதுச்சேரி; கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில்களில் ஆடித்திருவிழா உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்படுவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், கோவில்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: :கோவில்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, வைரஸ் பரவலை தடுக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கோவில்களுக்கு இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு கோவில் நிர்வாகங்கள் எதிர்வரும் ஆடித்திருவிழா, தீமிதித் திருவிழா மற்றும் தேர்திருவிழா நடத்துவது பற்றி அறிவுறுத்தும்படி கோரிக்கை விடுத்தனர்.வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு,, மேற்படி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்படுகிறது. தினசரி நித்தியபடி பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் பக்தர்கள் இன்றி தற்போது உள்ள முறையில் நடைபெற வேண்டும்.திருவிழாக்களின் முக்கிய தினங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட குருக்கள் சிறப்பு பூஜைகளை உரிய சமூக இடைவெளியை பின்பற்றி மேற்கொள்ளலாம். அதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. உபயதாரர்கள் அல்லது நன்கொடைதாரர்கள் பூஜையின் போது 5 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மூலவர் சன்னதியை தவிர்த்து, பிற சன்னதிகளில் நடைபெறும் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளை முடிந்தால் கோவில் நிர்வாகத்தினர் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.