பழங்காலத்து கிரேக்கக் கதை ஒன்று உண்டு. வீராங்கனை ஒருத்திக்கும், இளவரசன் ஒருவனுக்கும் ஓட்டப்பந்தயம் நடந்தது. ஏராளமான மக்கள் கூடினர். ஆரம்பத்தில் இருவரும் ஊக்கத்துடன் ஓடினர். சற்று நேரத்தில் வீராங்கனை, இளவரசனை முந்த ஆரம்பித்தாள். எனவே, அவளது கவனத்தை திசை திருப்ப இளவரசன் தங்க ஆப்பிள் ஒன்றை தரையில் உருட்டி விட்டான். அது சூரிய ஒளியில் பளபளத்தபடியே அவளுக்கு முன்னால் சென்றது. அதைப் பார்த்ததும் எடுக்கும் ஆசையில் சற்று வேகத்தைக் குறைத்தாள். கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் ஓட ஆரம்பித்தாள். அப்போது இளவரசன், முத்தால் ஆன மற்றொரு ஆப்பிளை உருட்டினான். அதையும் எடுக்க வேகத்தை மேலும் குறைத்தாள். இதையடுத்து, வைர ஆப்பிள் ஒன்றை இளவரசன் உருட்டிவிட, அவளது கவனம் முழுமையாக சிதறியது. ஓட்டத்தின் இலக்கையே மறந்தாள். இந்த இடைவெளியில் இளவரசன் அவளை வேகமாக முந்தி வெற்றி பெற்று விட்டான். வாழ்க்கையும் ஒரு ஓட்டப்பந்தயமே. அதில் நம் மன உறுதியை திருப்பும்படியாக, சாத்தான் பலவித தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். இதனால் பலர் இலக்குகளை மறந்து திசை மாறுகின்றனர். ஆண்டவரைத் தவிர வேறு எதையும் நாம் குறிக்கோளாக ஏற்பது கூடாது.