பதிவு செய்த நாள்
24
ஜூலை
2020
05:07
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் பார்வதி அங்காளபரமேஸ்வரி என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். இங்கு அமாவாசையன்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
தட்சன் மகளான தாட்சாயணி சிவபெருமானை மணம் புரிந்தாள். சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சன் கர்வத்துடன் நடந்தான். ஒருமுறை மருமகனான சிவனைக் காண கைலாயம் வந்த தட்சனை நந்தீஸ்வரர் தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். தந்தையின் கர்வத்தை அடக்க, தாட்சாயணி அகோர வடிவெடுத்து யாகத்தை அழித்தாள். உக்கிர வடிவத்தில் ‘அங்காளி’ என பெயர் கொண்டாள். சிவனும் அவளைத் தன் தோளில் சுமந்தபடி ஆக்ரோஷமாக நடனம் ஆடினார். அப்போது அங்காளியின் கை துண்டாகி பூலோகத்தில் விழுந்தது. அந்த இடம் தண்டகாரண்யம் என்னும் சக்தி பீடமாகியது. அதன் ஒரு பகுதியே மேல்மலையனுார் தலமாகும். இங்கு கருவறையில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறாள். வில்வமரம் தல விருட்சமாக உள்ளது.
பர்வதராஜனின் மகளாக பார்வதி சிவனை மணந்து கைலாயத்தில் இருந்தாள். அப்போது சிவன், பிரம்மா இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒருமுறை பிரம்மா சிவனைப் பார்ப்பதற்காக கைலாயம் வந்தார். அப்போது பார்வதி கவனக் குறைவாக ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மாவைத் தவறுதலாகச் சிவன் எனக் கருதி காலில் விழுந்தாள். நிமிர்ந்த போது அவர் பிரம்மா என்பதை அறிந்து வருந்தினாள். இருவருக்கும் ஐந்து தலை இருப்பது கூடாது என எண்ணி, பிரம்மனின் ஒரு தலையைக் கொய்யும்படி சிவனிடம் வேண்டினாள். அதனை ஏற்ற சிவனும் பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்கவும், கலியுகத்தில் மக்களுக்கு அருள்புரியவும் பார்வதியே புற்று வடிவில் அங்காளம்மனாக மேல்மலையனுாரில் வடக்கு நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள். இவளை அமாவாசையன்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
பிரம்மாவின் தலையைக் கொய்ய காரணமான பார்வதி மீது சரஸ்வதி கோபம் கொண்டாள். ‘‘என் கணவரின் (பிரம்மா) தலையைக் கொய்ய காரணமானதால் அகோர வடிவைப் பெறுவாய்” என்று சபித்தாள். இதன் பின் பார்வதியும் மேல்மலையனுாரில் அகோர உருவத்தில் அங்காள பரமேஸ்வரியாக சிலகாலம் தங்கியிருந்தாள். இதன் பின் திருவண்ணாமலையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கி, வயதான மூதாட்டி கோலம் பெற்று இங்கு வந்தாள். மலையனுாரில் உள்ள மீனவர்கள் அம்மனுக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்யத் தொடங்கினர்.
செல்வது எப்படி
திருவண்ணாமலையில் இருந்து 35 கி.மீ.,