பதிவு செய்த நாள்
25
ஜூலை
2020
03:07
தர்மபுரி: ஆடி மாத இரண்டாம் வெள்ளியான நேற்று, தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள, புற்று மாரியம்மன் கோவில் பூட்டப்பட்டிருந்ததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தர்மபுரி அடுத்த, செந்தில்நகரில் புற்றுகோவில் உள்ளது. வெள்ளிக்கிழமையன்று ஏராளமான பெண்கள், புற்றில் பால், முட்டையை ஊற்றி வழிபாடு செய்வது வழக்கம். மஞ்சள், குங்குமம் தூவி, புற்றை சுற்றி வலம் வந்து அம்மனை தரிசனம் செய்வர். இந்நிலையில், ஆடி மாத இரண்டாம் வெள்ளியான நேற்று, ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். தொடர்ந்து, பெண்கள் அதிகளவில் வந்து கொண்டிருந்ததால், வருவாய்த்துறையினர் உத்தரவுப்படி, கோவில் பூட்டப்பட்டது. இதையடுத்து, கோவில் வாசல் முன், பூஜை பொருட்களை வைத்து விட்டு சென்றனர். ஆனால், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், வெளிபேட்டை தெரு அங்காளம்மன் கோவில் உள்பட, பல்வேறு அம்மன் கோவில்களில், நேற்று பக்தர்கள் இல்லாமல் சிறப்பு பூஜைகள் நடந்தன.