பதிவு செய்த நாள்
25
ஜூலை
2020
03:07
கிருஷ்ணகிரி: ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு, நேற்று கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து செல்லியம்மன், சாக்கியம்மன், காத்தாயி அம்மன், மாரியம்மன், காளியம்மன் மற்றும் தண்டுமாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கூழ் படைத்து வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில், சுவாமிக்கு அபிஷேகம் செய்து, பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, கொளகத்தூர் பச்சியம்மன் கோவிலில், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இப்பகுதி பெண்கள், அம்மனுக்கு வளையல், புடவை, பலகாரங்கள், தட்டு வரிசை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து படையல் படைத்தனர். இதேபோல், கடைவீதி முத்துகாமாட்சி அம்மன் கோவில், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், நெசவாளர்காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில், தர்மபுரி செந்தில்நகர் அடுத்த கருவூலக்காலனி மகா மாரியம்மன் கோவில் உள்பட, பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.