சென்னை, ஆவணி அவிட்டம் தினமான நேற்று, பூணுால் மாற்றும் வைபவம், நேற்று விமரிசையாக நடந்தது.
ஊரடங்கை முன்னிட்டு, பெரும்பாலானோர், தங்கள் வீடுகளில் பூணுால் மாற்றி, வேதம் படிக்க துவங்கினர்.ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டு சடங்கு, உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள், ஆடி அல்லது ஆவணி மாதங்களில், அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடு.இது, ரிக், யஜூர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள், பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இந்நாளில், அனைவரும் இத்தகைய சடங்கை உருவாக்கியவர்களுக்கு நன்றி கூறி, தர்ப்பணம் செய்வர். மூதாதையருக்கு, எள், அரிசி, நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர், தாங்கள் அணிந்துள்ள பூணுாலை புதுப்பிப்பதோடு, வேதங்களை படிக்கவும் தொடங்குவர்.இந்த சடங்கு, சமஸ்கிருதத்தில், உபாகர்மா என அழைக்கப்படுகிறது. ஆவணி அவிட்டமான, யஜூர்வேதிகள் உபாகர்மா எனும் பூணுால் மாற்றிக் கொள்ளும் வைபவம், நேற்று விமர்சையாக நடந்தது.ஊரடங்கு காரணமாக, இந்தாண்டு கோவில்களில் பூணுால் மாற்றும் வைபவம் நடத்தப்படவில்லை.வேத விற்பன்னர்கள், ஆச்சாரியர்கள் இல்லங்களிலும், அவரவர் வீடுகளிலும் பூணுால் மாற்றிக் கொண்டு, யாகம் வளர்த்து வேதம் படிக்க துவங்கினர்.இன்று, ரிக்வேதிகள் பூணுால் மாற்றும் வைபவம் நடக்கிறது. யஜூர் வேதிகள் காயத்திரி மந்திரம் ஜெபிக்கின்றனர்.