விருதுநகர்:வத்திராயிருப்பு அருகே மூவரை வென்றானில் பாறை மீது பழமை , புராதான சிறப்பு மிக்க மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் குடவரை கோயில் அமைந்துள்ளது. இதைசுற்றிலும் குவாரிகள் அமைத்து பாறையை பெயர்த்து மொட்டை மலையாக்கி வருவது பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நுணுக்கமான சிற்ப வேலைபாட்டுடன் பல நுாற்றாண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னரால் சிவன், பார்வதி தேவிக்கு கோயில் எழுப்பி மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் எனும் பெயிரிட்டு வழிபட்டு வந்தார். இம்மலை மீதுள்ள வற்றாத கைலாச கங்கை தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்தது. இத்தீர்த்தம் லிங்கத்தின் மீது தானாகவே விழுந்து அபிேஷகம் செய்யும் அற்புதம் வேறெங்கும் காணக்கிடைக்காத பொக்கிஷம்.
பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கோயிலை பெயர்த்து எடுக்காத குறையாக கிரிவலம் பாதையில் அரசு அனுமதியுடன் கல் குவாரிகள் அமைத்து கருங்கற்கள் என்ற பெயரில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக சுற்று கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதால் ஏற்படும் அதிர்வலைகள் குடவரை கோயிலுக்கும், வற்றாத கங்கை தீர்த்தத்தின் நீர் வரத்து பாதைக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. கோயிலின் புனிதம், பாதுகாப்பு கருதி கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.