பதிவு செய்த நாள்
05
ஆக
2020
01:08
பல்லடம்: கருப்பர் கூட்டம் எனும் அமைப்பு, கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, யூ டியூப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆதீனங்கள், சிவனடியார்கள், முருக பக்தர்கள் என, இந்து மதம் சார்ந்தவர்கள் மட்டுமன்றி, பல்வேறு மதத்தினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். கருப்பர் கூட்டம் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனிடையே, ‘உலகம் முழுவதும் கந்த சஷ்டி‘ எனும் கூட்டு பயிற்சிக்கு, ஆதீனங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆக, 9 அன்று காலை 10 முதல், கந்த சஷ்டி கவச கூட்டு பயிற்சி, ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. அதில், இந்தியா மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மற்றும் மொரிஷியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டு பயிற்சியில், ’பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், மற்றும் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இது குறித்து காமாட்சிபுரி ஆதீனம் கூறுகையில், ’கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களை கண்டிக்கும் வகையில், கடந்த இரண்டு வாரங்களாக தினசரி பாராயணங்கள், மற்றும் வேல் பூஜைகள் நடந்து வருகின்றன. ஆக., 9 அன்று, பேரூர் ஆதீனம், மற்றும் சிரவை ஆதீனம் இணைந்து நடத்தும் ஆன்லைன் கூட்டு பயிற்சி, மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. அதில், உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, ’உலகம் முழுவதும் கந்தசஷ்டி’ எனும் டெலிகிராம் குழு உருவாக்கப்பட்டு, பக்தர்கள் அதில் இணைந்து வருகின்றனர். மேலும், கூட்டு வழிபாட்டு பாராயணத்தில் பங்கேற்க, ஆதீனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.