திருப்புவனம்: திருப்புவனம் பெரிய கண்மாய் குடிமராமத்து பணியின் போது பண்டைய கால வரி தள்ளுபடி குறித்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. கலியாந்துார் மடை சீரமைப்பின் போது 3 அடி நீளமுள்ள கல்வெட்டு கிடைத்துள்ளது. கி.பி.,1539ம் ஆண்டைச் சேர்ந்த அந்த கல்வெட்டில் ஹிஜிரி வருடம் 737ல் அடும்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டதாகவும் வயிராதராயன் என்ற அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் முழு பகுதியும் வெளியில் எடுக்க முடியவில்லை. கல்வெட்டின் ஒரு சில பகுதி உட்புறமாக உள்ளது. இதனால் கல்வெட்டில் எழுதப்பட்டதன் அர்த்தம் முழுமையாக தெரியவில்லை. எனவே தமிழக தொல்லியல் துறை கல்வெட்டு அனைத்தையும் முழுமையாக வெளியே எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே திருப்புவனம் கண்மாய் பகுதியில் ராஜராஜன் காலத்திய கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.