பதிவு செய்த நாள்
06
ஆக
2020
11:08
சென்னை; அயோத்தியில், ராமர் கோவில் பூமி பூஜை நடந்ததை முன்னிட்டும், விரைவில், சம்ரோக் ஷணம் நடந்து, ராமபிரான் அருள்பாலிக்க வேண்டியும், தமிழகத்தின் பல பகுதிகளில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பேட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட இடங்களில், கிராம கோவில் பூசாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 16 ஆயிரத்து, 800 வீடுகளில், ராம பிரானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சென்னையில், திருவான்மியூர், கெனால் பேங்க் ரோட்டில் உள்ள, சுக்ல யஜுர்வேத பாடசாலையில், கணபாடிகள், வித்யார்த்திகள் சார்பில், வேதபாராயணம், உபநிஷத் பாராயணம், ராமருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. தி.நகர் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில், முன்னாள் தலைவர் வேதாந்தம் தலைமையில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதைப்போல, தமிழகத்தின் பல்வேறு இடங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.