பதிவு செய்த நாள்
06
ஆக
2020
01:08
அயோத்தியை ஸ்ரீராமர் ஆண்ட காலத்தில், உலக நன்மைக்காக அஸ்வமேத யாகம் நடத்த முடிவெடுத்தார். அஸ்வமேதக் குதிரையும் நாடுகளை சுற்றி வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டது.அஸ்வமேதக் குதிரையை, வீரமணி என்ற மகாவீரனின் மகன் ருக்மாங்கதன் கட்டிப்போட்டான். வீரமணி, மகா சிவபக்தன். ஈசன் அவன் முன் தோன்றி, ஸ்ரீ ராமரிடம் விரோதம் கொள்வது தவறு என்று இடித்துரைத்தார்.ஆனால், வீரமணியோ, நான் யுத்தம் செய்வதென்று தீர்மானித்துவிட்டேன் என்று மன்றாடினான். ஈசன், ஸ்ரீராம தரிசனத்தை அவனுக்குக் கிடைக்கச் செய்து அவனை ராம பக்தனாக்கி, அவனுக்கு உண்மையை உணர்த்த முடிவு செய்தார்.
இருபடைகளும் உக்கிரமாக மோதின. அனுமன், உக்கிரத்துடன் போர்க்களத்தில் புகுந்து ருக்மாங்கதனையும், அவன் வீரர்களையும் அடித்துத் தள்ளினார். வீரமணியோ அஸ்திர மழையால் சத்ருக்கனன், புஷ்கரன் ஆகியோரை திக்குமுக்காடச் செய்தான். வீரமணியின் வேகம் அதி உக்கிரமாவதைக் கண்ட சத்ருக்கனன் தான் முன்னர் தவசியிடம் பெற்ற ராமபாணத்தால் அவனின் மார்பில் தாக்கி மூர்ச்சையாக்கினான்.பக்தன் படுகளத்தில் வீழ்ந்ததைக் கண்ட ஈசன் சக்தியுடனும், வீரபத்ரருடனும் யுத்தகளம் புகுந்தார். சத்ருக்கனன் ஈசனை எதிர்த்தான், புஷ்கரன் வீரபத்ரரை எதிர்த்தான், ஆஞ்சனேயன் சக்தியுடன் போர் புரிந்தார். யுத்தபூமி உக்கிர பூமியானது. ஈசனின் சினத்திற்கு முன் சத்ருக்கனன் எம்மாத்திரம். நொடிப்பொழுதில் நினைவிழந்து வீழ்ந்தான், அனுமன், ”மகேஸ்வரா! தங்களின் ருத்திர ரூபமான என்னை வீழ்த்துங்கள் ” என்று சொல்லி ராம நாமத்தை ஜெபித்தபடி ஈசன் முன் இரு கைகளையும் கட்டியபடி, நமஸ்கரித்து நின்றார். அமிர்தத்திற்கு நிகரான ராம நாமத்தில் ஈசன் நொடிப்பொழுதில் தம்மை மறந்தார். அவர் சினம் அடங்கியது.வீரமணி பக்தியால் என்னைக் கட்டிவிட்டான், நீயோ இப்போது என்னை ராம நாமத்தால் கட்டுப்படச் செய்துவிட்டாய், இருவராலும் கட்டுண்டு நிற்கிறேன் நான். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் ” என்றார் ஈசன். ”எனக்குத் தங்கள் அனுக்கிரகம் தான் வேண்டும். என்னைத் தடுக்காது அனுமதி கொடுங்கள். சஞ்சீவி பர்வதம் எடுத்துவந்து சத்ருக்கனனையும் மற்றவரையும் எழுப்புகிறேன். அதுவரை தாங்கள் இங்கேயே இருக்கவேண்டும்.” என்று வேண்டினார் அனுமன்.பின், பர்வத மலையைக் கொணர்ந்து, யுத்த களத்தை அடைந்தான், அனுமன்; ஈசனோ, நகை்ததார். அனுமனுக்கு, அதன் உட்பொருள் விளங்கிவிட்டது.
”மகத்தான ராம நாமம் இருக்கும் போது அறிவிலியாய் நான் சிரமப்பட்டு மலையை எடுத்து வந்தது எத்தனை அபத்தமானது ! எப்படிப்பட்ட தவறை செய்துவிட்டேன் ” என்று கூறி வருந்திய மாருதி கண்மூடி ஸ்ரீ ராமரைத் தியானித்து ராம நாமத்தை ஜெபித்தபடி அனைத்து வீரர்களையும் எழுப்பினார்.யுத்த களத்தில் ராம நாம கோஷம் விண்முகடு வரை எழுந்து எதிரொலித்தது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அங்கு காட்சியளித்தார். ஈசன் வீரமணியை எழுப்பி ராமபிரானை தரிசிக்கும்படி கூறினார். அந்த திவ்ய மங்கள ரூபத்தைக் கண்ட வீரமணி பக்தி பொங்க பரவசத்தோடு கைகளைக் கூப்பி அவரை வணங்கினான். ஸ்ரீராமரும் அவனிடம் அன்பு கொண்டவராய் என்றைக்கும் தம்மிடம் பக்தி குன்றாதிருக்க அருள் செய்தார்.