பதிவு செய்த நாள்
07
ஆக
2020
10:08
அர்ஜூனனுக்கு போதித்த பகவத்கீதை கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
* தர்மத்தை நிலைநாட்டி நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் யுகம்தோறும் பூமியில் மனிதனாக அவதரிக்கிறேன். நீயும் தர்மத்தைக் காக்க துணிந்து நில்.
* எல்லா உயிர்களின் இதயத்திலும் கிருஷ்ணனாகிய நான் இருக்கிறேன். எனது சக்திக்கு கட்டுப்பட்டு உயிர்கள் எல்லாம் ஆட்டுவிக்கப்படுகின்றன.
* இலை, பூ, தண்ணீர் என்று எதை அன்புடன் அளித்தாலும் ஏற்று அருள்புரிய தயாராக இருக்கிறேன்.
* குரு என்னும் மாலுமியும், தெய்வீக அருள் என்னும் காற்றும் சாதகமாக இருந்தால் பிறவிக்கடலை கடந்து விடலாம்.
* உயிர்கள் அனைத்தும் என்றாவது ஒருநாள் பிறப்பு, இறப்பைக் கடந்தாக வேண்டும். இதுவே வாழ்வின் குறிக்கோள்.
* கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி மூலம் ஆன்மிக வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும்.
* எல்லா உயிர்களுக்கும் உதவிபுரிய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.
* மனம் போன போக்கில் மனிதன் வாழக் கூடாது. புலன்களுக்கு அடிமைப்பட்டவன் கீழ்நிலையை அடைவான். பகுத்தறிவால் நன்மை, தீமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
* ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல, புலன்களை புத்தியால் அடக்கியவன் ஞானம் அடைவான்.
* வானுலக தேவர்களும் மண்ணில் பிறப்பெடுத்து அன்பு நெறியில் வாழ்ந்து ஞானம் அடைய விரும்புகின்றனர்.
* நேர்மை, பணிவு, பொறுமை, சேவை மனப்பான்மை, மனத்துாய்மை, அடக்கம் ஆகியவை அறிவுடையோரின் அடையாளங்கள். * பூக்களில் இருந்து தேனைச் சேகரிக்கும் தேனீ போல மனிதன் பல வழிகளிலும் நற்பண்புகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.
* உணவு, உறக்கம், உழைப்பில் மிதமாக இருப்பவனே சிறந்தவன். அடங்காத முரட்டுக் குதிரையான மனதை அடக்கும் வல்லமை அவனிடம் இருக்க வேண்டும்.
* வேலையின்றி சும்மா இருப்பது கூடாது. செயலற்ற நிலையில் உடலைப் பராமரிப்பது கூட சிரமமாகி விடும்.
* செய்யும் கடமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், பலனைப் பற்றிய எண்ணம் ஏற்படாது. அப்போது தான் மனிதன் சுதந்திரமாக வாழ முடியும்.
* அளவான பேச்சு, உணவில் கட்டுப்பாடு இருந்தால் மனிதன் தன்னை அறியும் அறிவைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வான்.
* நாடாளும் மன்னராக இருந்தாலும் பெரியவரைக் கண்டால் வணங்குவது அவசியம். மனப்பூர்வமாக பெரியவர்களுக்குச் சேவை செய்தால் அகந்தையை வெல்லலாம்.
* கொழுந்து விட்டு எரியும் தீ, கட்டைகளை எரித்து சாம்பலாக்குவது போல என்னிடம் முழுமையாகச் சரணடைந்தால் பாவம் முற்றிலும் அழியும்.