ஆயர்பாடி நந்தகோபர் அரண்மனையில் கிருஷ்ணர் பிறந்த செய்தி எங்கும் பரவியது. இதையறிந்த ஆயர்கள் வாத்தியங்கள் இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்தணர்கள் கூடி வேத மந்திரங்களை ஓதினர். பசுக்கொட்டில்களிலும், வீதிகளிலும் கோபியர்கள் மாக்கோலமும், மஞ்சள், செஞ்சூரணத்தால் சித்திர கோலமும் வரைந்தனர். வாசனை திரவியம் பூசியும், ஒருவருக்கொருவர் பன்னீர் தெளித்தும் மகிழ்ந்தனர். லட்சுமியின் அம்சமான பசுக்களுக்கு மாலை சூட்டினர். வாசலில் மலர் அலங்காரம் செய்தனர். விதவிதமான ஆடைகள், காதணி, கழுத்தணி, முத்துக்கம்மல், அட்டிகை என ஆபரணங்கள் அணிந்து நந்தகோபரின் வீட்டுக்குச் சென்றனர். கிருஷ்ணரைக் கண்டு, “வாசுதேவ கிருஷ்ணா! எங்களின் அன்புச் செல்வமே! நீ நீடுழி வாழ்ந்து எங்களைக் காத்தருள வேண்டும்’’ என வேண்டினர். நந்தகோபரும், யசோதையும் பொன், பொருள், ஆடை, பசுக்கள் என தானம் அளித்தனர்.