பெங்களூரு- மைசூரு சாலையில் 50 கி.மீ., துாரத்திலுள்ள சென்னப்பட்டினம் அருகில் தொட்டமளூர் என்னும் தலம் உள்ளது. இங்குள்ள அப்ரமேயர் (பெருமாள்) கோயிலில் உள்ள நவநீதகிருஷ்ணர் சன்னதி புகழ் மிக்கது. இங்கு கிருஷ்ணரை தவழும் குழந்தை வடிவில் தரிசிக்கலாம். வேதங்களைத் தந்த வியாசரால் பிரதிஷ்டை செசய்யப்பட்ட சிலை இது. ஒருமுறை அருளாளரான புரந்தரதாசர் இங்கு வரும் போது நண்பகலாகி விட்டது. கோயில் நடையை சாத்தி விட்டனர். சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் “ஜகத்தோத்தாரணா” என்னும் புகழ் மிக்க கீர்த்தனையை பக்தியுடன் பாடினார். உடனே கோயிலின் கதவுகள் எல்லாம் திறந்து கொண்டதோடு, கிருஷ்ணர் முகத்தை திருப்பி புரந்தரருக்கு அருள்புரிந்தார். குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் இங்கு மரத்தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இங்கு கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.