பதிவு செய்த நாள்
09
ஆக
2020
03:08
பல்லடம்:1,008 வேல் வழிபாட்டுடன், ஆன்மிக அரசியல் மாநாடு நடத்த, இந்து மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது.கந்த சஷ்டியை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ பதிவு, தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மதம் சார்ந்த ஆன்மிக பெரியோர்கள், சிவனடியார்கள், ஆதீனங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், 1008 வேல் வழிபாடு நடத்த, இந்து மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. அக்கட்சியின், மாநில துணை தலைவர் பாலாஜி கூறியதாவது:மாநிலம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைத்து, அக்., 2ல், காங்கயம் - சிவன்மலையில், மாநாடுடன், 1,008 வேல் வழிபாடும் நடைபெறும். கொரோனா பாதிப்பு குறையும் பட்சத்தில், மாநிலம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் வரவழைக்கப்படுவர்.இல்லாவிடில், மாவட்ட அளவிலான பக்தர்கள் பங்கேற்க நிகழ்ச்சி நடைபெறும். மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகிக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.