பதிவு செய்த நாள்
10
ஆக
2020
02:08
சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதை கண்டித்து, கோவையில் வீடுகளில் வேல் பூஜை, கந்த சஷ்டி பாராயணம் செய்யப்பட்டது.கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இதைக் கண்டித்து, நேற்று மாலை பக்தர்கள் அனைவரும் வீடுகள்தோறும், வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என பா.ஜ., இந்து அமைப்புகள், மடாதிபதிகள், ஆதினங்கள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்படி, கோவையில் இந்து முன்னணி சார்பில், பல்வேறு பகுதிகள், வீடுகளில் கந்தசஷ்டி பாராயணம், வேல் பூஜை நடந்தது. இந்து முன்னணியை சேர்ந்த, 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது வீடுகளில் கந்த சஷ்டி கவச பாராயணத்தில் ஈடுபட்டனர்.கோவை டாடாபாத் அன்னை கஸ்துாரிபாய் மகளிர் மற்றும் நுகர்வோர் அமைப்பு சார்பில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் கந்த சஷ்டி பாராயணம் மேற்கொண்டனர்.அன்னுாரில்...அன்னூர் ஒன்றியத்தில் வேல் வழிபாட்டு குழு, இந்து முன்னணி, பா.ஜ., மற்றும் பக்தர்கள், 100 இடங்களில் வேல் படங்களை வைத்து, வழிபாடு செய்தனர். பிள்ளையப்பம்பாளையம், அன்னூர், அ.மேட்டுப்பாளையம், குமாரபாளையம், கணேசபுரம், கெம்பநாயக்கன்பாளையம், மூக்கனூரில், வழிபாடு நடந்தது. வெற்றிவேல், வீரவேல் முழக்கம் இட்டனர்.
சில வீடுகளில் கந்த சஷ்டி கவசம் வாசிக்கப்பட்டது.தொண்டாமுத்துாரில்...வடவள்ளி, வீரகேரளம், வேடபட்டி, தொண்டாமுத்தூர், நரசீபுரம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்துக்கள், நேற்று மாலை, 6:00 மணிக்கு, வீட்டின் வாசலில், முருகர் படம் வைத்து, வேல் கோலம் வரைந்து, பூஜை செய்து, கந்த சஷ்டி கவசத்தை பாடினர்.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறுகையில், முருக பெருமானை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் முன்னோர் வழிபட்டுள்ளனர். பல்வேறு காப்பியங்களில் அவரது பெருமைகள் கூறப்பட்டுள்ளன. அறிவு குறைவாக உள்ளவர்கள், கந்த சஷ்டி கவசத்தை இழித்தும், பழித்தும் பேசியதால், உலகெங்கிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாராயணம் நிகழ்த்தப்பட்டுள்ளது. பேரூர் ஆதினத்தில், 15 நாட்களாக பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக நோய் மற்றும் தீய சக்திகள் நீங்கும், என்றார்.-நமது நிருபர் குழு-