பதிவு செய்த நாள்
11
ஆக
2020
09:08
பல்லடம்: இந்துக்கள் பெரிதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 22ம் தேதி வருகிறது. இதற்காக, சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதிக்க வேண்டும் என, இந்து அமைப்புகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான சிலைகள், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கவுண்டம்பாளையத்தில் தயார் நிலையில் உள்ளன.
இது குறித்து சிலை தயாரிப்பாளர் பாலாஜி கூறியதாவது: ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான சிலை தயாரிப்பு தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. அவ்வகையில், பல்லடம் கவுண்டம்பாளையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக, விநாயகர் சிலைகள் தயாரித்து, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகிறோம். கிழங்கு மாவு, பேப்பர் மாவு, குச்சிகள், மற்றும் வாட்டர் கலர் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், கடந்த மார்ச் மாதங்களில் சிலைகளை தயாரிக்க துவங்கினோம். நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கைவசம் உள்ளன. அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், கூடுதலாக 300க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்படும். இந்து மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில், சிலை பிரதிஷ்டைக்கு அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.