பதிவு செய்த நாள்
11
ஆக
2020
01:08
சென்னை; கோவில் மனைகளின் வாடகையை உயர்த்தி, வருவாயை பெருக்க, ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகம் முழுதும், கோவில்களுக்கு சொந்தமான, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
மனை வாடகை அடிப்படையில், இந்த நிலங்களை பெற்றவர்கள், அதில், வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதற்கு, நில மதிப்பு அடிப்படையில், வாடகை நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. அதனால், கோவில்களுக்கு மிக குறைந்த அளவிலேயே, வருவாய் கிடைக்கிறது. சட்டப்படி, நிலத்தின் சந்தை மதிப்பில், ஒரு சதவீதம் குடியிருப்புகளுக்கான வாடகையாக நிர்ணயிக்க வேண்டும். ஆனால், 2001ம் ஆண்டு சந்தை நிலவரப்படியே, தற்போதும் பல இடங்களில், வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இதை உயர்த்தினால், கோவில்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். அறநிலையத் துறை அதிகாரிகள், வாடகையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதால், வரவேற்பு கிடைத்துள்ளது. குடியிருப்போர் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். முதல்வர், துணை முதல்வர், அறநிலையத் துறை அமைச்சருக்கு மனு அளித்து வருகின்றனர். புதிய வாடகை அடிப்படையில், குடியிருப்போருக்கு, நோட்டீஸ் அனுப்பும் பணிகளை, அறநிலையத் துறை முடுக்கி விட்டுள்ளது.