பதிவு செய்த நாள்
12
ஆக
2020
11:08
மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள், கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், தங்கள் வீட்டு குழந்தைகளை கிருஷ்ணராக, ராதாவாக பாவித்து, அவர்கள் போல் வேடமணிந்து மக்கள் வழிபடுவது வழக்கம். குறிப்பாக கோகுலாஷ்டமி விழா, மழலையர், தொடக்க பள்ளிகளில் களை கட்டும். அதேபோல் கோவில்களிலும் வழிபாடு நடக்கும். நடப்பாண்டு, கிருஷ்ண ஜெயந்தி விழாவான நேற்று, கொரோனா தொற்றால், வீடுகளில் எளிமையாக கொண்டாடப்பட்டது. ஈரோட்டில், வீரப்பன் சத்திரம், டீச்சர்ஸ் காலனி, காரைவாய்க்கால், அக்ரஹார வீதி உள்ளிட்ட பல பகுதிகளில், வீட்டில் மாவிலை தோரணம் கட்டி, வாசல் தெளித்து, கிருஷ்ணரின் காலடி தடம் பதித்து, மக்கள் வழிபாடு செய்தனர். நஞ்சனாபுரம், ஏ.ஈ.டி., பள்ளி, கே.எஸ்.நகர், ரங்காபவனம் குருவாயூர் கிருஷ்ணன் கோவில், ராத்திரி சத்திரம் பாமா, ருக்குமணி ராதா கிருஷ்ணன் கோவில் உள்ளிட்டவற்றில், இரவு சிறப்பு வழிபாடு நடந்தது.
நம்பியூரில் கோமாதா பூஜை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், நம்பியூரில் கோமாதா பூஜை நேற்று நடந்தது. ஒன்பது நாட்டு பசு மாட்டுக்கு, கோமாதா பூஜை நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய தலைவர் சாமிநாதன், செயலாளர் கருப்புச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.