பதிவு செய்த நாள்
12
ஆக
2020
11:08
தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், அண்டை மாநிலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். தற்போது, கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இக்கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வருவதில்லை. இந்நிலையில், தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு அஷ்ட பைரவ யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், இதில், பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.