மதுரை: விநாயகர் சதுர்த்தி (ஆக.,22) வந்தாலே கைவினைக் கலைஞர்கள் விதவிதமான விநாயகர்களை தயாரித்து அசத்தும் நிலையில் மதுரை திருப்பாலைபூவராகம் மூலிகை குடில் காசிதவம் நாட்டு பசுஞ்சாணத்தில் மணக்கும் மூலிகை விநாயகரை தயாரித்துள்ளார்.
அவர் கூறியதாவது: நாட்டு மாடுகளை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் சாணத்தில் இருந்து மூலிகை சாம்பிராணி, ஹேண்மேட் பத்தி, விபூதி தயாரிக்கிறேன். வீடுகளில் பாரம்பரிய முறைப்படி சாணம் தெளித்துகோலமிட முடியாத சூழலில் சாண பொடி தயாரிக்கிறேன். இதை சிறிதளவு நீரில் கலந்து வாசல் தெளித்தால் கிருமிகள் நெருங்காது. இந்த ஆண்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இயற்கை முறையில் விநாயகர் சிலைகளை பல்வேறு அளவுகளில் தயாரித்து வருகிறேன். நாட்டு பசுஞ்சாணம், கோமியம், விரலி மஞ்சள், பச்சை கற்பூரம், ஏலக்காய், வாவிடம் என 18 மூலிகை பொருட்களுடன் களிமண் கலந்து விநாயகர் சிலை செய்கிறேன்.விநாயகரில் கலந்துள்ள மூலிகையில் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக்கும் தன்மை இருப்பதால் சதுர்த்தி அன்று சிலையை வைத்து பூஜை செய்த பின் நீரில் கரைக்காமல் தொடர்ந்து வழிபடலாம். கரைக்க விரும்பினாலும் செயற்கை வர்ணம் தீட்டப்படாத இந்த சிலையால் நீர்நிலை மாசடையாது.ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு நாட்டு மாட்டு சாணத்தில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க கூறுவதை பின்பற்றி சாணம், மூலிகை கலவையில் பல்வேறு பொருட்களை செய்கிறேன், என்றார்.- தொடர்புக்கு 80982 53339