பதிவு செய்த நாள்
12
ஆக
2020
03:08
சேலம் மாவட்டம், சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, 56 ஏக்கர் விவசாய நிலம், இன்று அறநிலைய துறை சார்பில், பொது ஏலத்தில் குத்தகைக்கு விடப்படுகிறது.ஏலத்தை பாதுகாப்புடன் நடத்தி, கோவில் வருமானத்திற்கு வழி செய்ய வேண்டும் என, பக்தர்களும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப கோவில்கள்சேலம் மாவட்டம், ஆத்துார் வட்டம், தேவியாக்குறிச்சி கிராமத்தில், சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் உப கோவில்களாக விநாயகர், அய்யனார், கம்ப பெருமாள், பிடாரியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன.இந்த கோவில்கள் அனைத்தும், ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில், 1976ல் கொண்டு வரப்பட்டன.
அக்கோவில்களுக்கு, தேவியாக்குறிச்சி கிராமக் கணக்குகளின் படி, 52.05 ஏக்கர் நிலம் உள்ளது; கோவில் புறம்போக்கு நிலம், 11:45 ஏக்கர் உள்ளது.மேலும், தனியார் செட்டில்மென்ட் பத்திரம் வாயிலாக, அய்யனார் கோவிலுக்கு, மணிவிழுந்தான் கிராமம், தேவியாக்குறிச்சி கிராமம் ஆகியவற்றில், 4:09 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த 4:09 ஏக்கர் நிலத்தை, தேவியாக்குறிச்சி கிராமத்தில் வசித்து வந்த செம்மலைப் பிள்ளை என்பவரின் மகன், சுப்பராய பிள்ளை எழுதி வைத்துள்ளார்.அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், கோவில் சொத்துக்கள், பல ஆண்டுகளாக, பொது ஏலத்தில் குத்தகைக்கு விடப்படுவதில்லை. உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் சிலர், தங்களின் அரசியல், காவல் துறை அதிகாரத்தை பயன்படுத்தி, அனுபவித்து வருகின்றனர்.
கல்வி நிறுவனம்: மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 13 ஏக்கர் நிலம், தனியார் கல்வி நிறுவன ஆக்கிரமிப்பின் பிடியில், 34 ஆண்டுகளாக சிக்கி உள்ளது.அதில் தான், பள்ளி, கல்லுாரிகள், தற்போது இயங்கி வருகின்றன. அதன் வாயிலாக, தனியார் கல்வி நிறுவனம், ஆண்டுதோறும், பல கோடி ரூபாய் வருமானம் பார்த்து வருகிறது.ஆனால், சம்பந்தப்பட்ட சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு வருமானம் இல்லை எனக்கூறி, கோவில் அர்ச்சகரின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக, சென்னையை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரும், தேவியாக்குறிச்சியை சேர்ந்த பரமசிவம் என்பவரும் கண்டறிந்தனர். இதையடுத்து, கோவில் நிலத்தை மீட்க, ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து, போராடி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தின் பலனாக, அறநிலையத் துறை சார்பில், 56.59 ஏக்கர் விவசாய நிலம், இன்று பொது ஏலத்தில் குத்தகைக்கு விடப்படுகிறது. அதை பாதுகாப்புடன் நடத்தி, கோவிலுக்கான வருமானத்தை பெருக்க வேண்டும் என, கிராம மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். - நமது நிருபர்-