பதிவு செய்த நாள்
13
ஆக
2020
03:08
பொள்ளாச்சி:கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்தாண்டை விட இந்தாண்டு விநாயகர் சிலை உற்பத்தி குறைந்துள்ளது. வீடுகளில் வழிபாடு இருக்கும் என்ற நம்பிக்கையில், களிமண் சிலைகள் தயாரித்து வருவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியில், இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா வழக்கம் போல நடைபெற அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்து அமைப்புகள் காத்திருக்கின்றனர்.வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெறும் என்ற நம்பிக்கையில் மண்பாண்ட தொழிலாளர்கள், சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி ஆர். பொன்னாபுரம், ஆவல்சின்னாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மண்பாண்ட தொழிலாளர்கள், அழகிய விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:ஊரடங்கு காரணமாக நடப்பாண்டு, 70 சதவீதம் மட்டும் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு சிலை, 100 ரூபாய் முதல், இரண்டாயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, மக்கள் சிலைகளை வாங்கி சென்று, வீடுகளில் வழிபாடு செய்வார்கள். இந்தாண்டு, பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுமா என்பது தெரியவில்லை. இதனால், அனைத்து இந்துக்கள் வீடுகளிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இந்து அமைப்பினர் கூறுகையில், இந்தாண்டு அனைத்து இந்துக்கள் வீடுகளிலும், விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாட்டுக்கு பின், நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய பிரசாரம் செய்கிறோம் என்றனர்.