பதிவு செய்த நாள்
23
ஆக
2020
03:08
வாக்கிய பஞ்சாக்கத்தின்படி, ராகு மற்றும் கேது பெயர்ச்சிகள் இந்த ஆண்டு 2020 செப்டம்பர் 1ம் தேதி (சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) பகல் 2.16 க்கு நிகழவிருக்கிறது.
இதன் பலன்கள் பற்றி அனைவர் மனதையும் ஆட்டிப்படைக்கக்கூடிய கேள்வி ஒன்றுண்டு.
கொரோனா பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு கிடைக்குமா? பெயர்ச்சி நடந்த மறுநிமிடம் மந்திரம் போல அவை ஓடி மறையுமா?
இதற்கான பதிலில் மகிழ்ச்சி, வருத்தம் இரண்டுமே உண்டு.
நாம் உடனடித் தீர்வை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் சென்ற ஒன்றரை ஆண்டுகள் இருந்ததைவிட சிரமங்கள் நிச்சயமாகக் குறையும்.
ராகுவும், கேதுவும் ஏராளமான விஷயங்களுக்குப் பிரதிநிதிகளாக உள்ளனர். அவற்றில் விஷ ஜந்துக்கள், கிருமிகள் ஆகியவை உண்டு. காரணம், புராண நம்பிக்கையின்படி இவை இரண்டுமே பாம்புகள்தான்.
இவை ‘சாயா‘ (நிழல்) கிரகங்கள் என்பதால் தாங்கள் அமர்ந்த வீட்டின் அதிபரைச் சார்ந்து அவர்களின் குணத்தையும், தங்களுடன் கூட்டாக அமரந்திருக்கும் கிரகங்களின் குணத்தையும் பிரதிபலிப்பார்கள். தவிர, அவர்களின் தன்மையைக் கெடுக்கவும் செய்வார்கள்.
கடந்த ஒன்றரை வருடங்களாக கேது பகவான் குருவீட்டிலும், ராகுபகவான் புதன் வீட்டிலும் அமர்ந்து அவர்களின் பணிகளைச் சற்று சலனப்படுத்தி வந்தனர்.
புதன் என்பவர் மருந்துகள், மூலிகைகள் சம்பந்தப்பட்டவர். இதனால் மருத்துவ உலகிற்குப் பெரிய சவாலாகவே ராகு விளங்கியதைப் பார்த்தோம்.
குரு பகவானோ, நிதி நிலைமையைக் குறிப்பவர். அவருடைய வீட்டில் அவருடனேயே சேர்ந்து அமர்ந்திருந்த கேதுவும், சனி பகவானும் உலகப் பொருளாதாரத்தையே ஒரு உலுக்கு உலுக்கிப் பார்த்தார்கள்.
கடந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஆறுகிரகங்கள் ஒரே வீட்டில் கூட்டம்போட்டன. அந்தச் சமயத்தில்தான் பலவகைப் பிரச்னைகளும் தொடங்கின.
பிறகு ஒவ்வொரு கிரகமாக விலகினாலும், முக்கியமான சனி, கேது கூட்டமைப்பு முழு சுபரான குரு பகவானின் கையைக் கட்டிப்போட்டன.
இப்போது குரு பகவானை அமைதியாகச் செயல்பட அனுமதித்து கேது நகரவிருப்பதும் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டைவிட்டு நகர்வதும் உலகின் நிதி நிலைமைக்கு நற்செய்திதான்.
ராகு பகவான், புதனின் வீட்டை விட்டு நகர்வதோடு, சுக்கிரன் வீட்டில் சென்று அமரவிருக்கிறார். இதனால் வேறு வகையான சிரமங்களுக்கு உட்படுவோம்தான். ஆனால் மருத்துவ உலகில் மகிழ்ச்சிகரமான திருப்பங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். தடுப்பு மருந்துகள் வெற்றியடையும். சிகிச்சைகள் விரைந்து பலன் அளித்து பாதிக்ப்பட்டோரின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்.
அடுத்த ஆண்டின் முதல் பாதியில் ராகு பகவான் ரோகிணி நட்சத்திரத்துக்கு மாறும்போது நிச்சயமாக நாம் அதிக நன்மைகளைக் காண்போம்.
ராகு, சுக்கிரன் வீட்டில் அமரவிருக்கிறார். எனவே சுக்கிரனின் சேர்க்கை மற்றும் நகர்வைப்பொருத்துப் பலன்கள் மாறும். சுக்கிரன் இருபத்து மூன்றரை நாட்கள் மட்டுமே ஒரு வீட்டில் தங்குவார். எனவே நமக்கு ராகுவால் சிரமங்கள் ஏற்பட்டாலும் அவை அதிக காலத்துக்கு நீடிக்காது.
அதைவிட நல்ல செய்தி, விரைவில் ராகுபகவான் குருபார்வை பெறவிருக்கிறார். எனவே அனைவருக்கும் நிதி நிலைமை சீரடையும். இவையெல்லாம் ஆறுதல் தரும் விஷயங்கள்.
காலசக்கரத்தின் எட்டாம் வீடாகிய விருச்சிகத்தில் கேது வருவதால் சில சங்கடங்களை உலக அளவில் தவிர்க்க இயலாது. எட்டாம் வீடு ஆரோக்யத்தைக் குறிப்பது. அதன் அதிபர் செவ்வாய். எனவே செவ்வாயின் நகர்வைக்கொண்டுதான் அவ்வப்போது நிலைமை மாறிக்கொண்டே வரும்.
நல்ல வேளையாய்ச் செவ்வாய் ஒரு வீட்டில் ஒன்றரை மாதங்கள்தான் தங்குவார். நல்ல சேர்க்கையும் நல்ல பார்வையும் வரும்போதெல்லாம் நம் சிரமங்கள் நிச்சயம் குறையும். பிரச்னைகளும் அத்தனை நாட்களுக்குமேல் தொடராது யாருக்குமே.
ராகுகேதுவை மனமார தியானம் செய்து பரிகாரங்கள் செய்யச் செய்ய கெடுபலன்கள் பெருமளவு குறையும் என்பது உறுதி.