பதிவு செய்த நாள்
29
ஆக
2020
02:08
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், வெங்கம்பூர் வரதராஜபெருமாள் கோவிலில் நடந்த ஊழல் குறித்து விசாரித்து, செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஈரோடு தெற்கு மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கினர்.
இதுகுறித்து பா.ஜ., மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், வெங்கம்பூர் வரதராஜபெருமாள் வகையறா கோவில்களில், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் போலி செலவுச்சீட்டு தயாரித்து, கையாடல் செய்துள்ளனர். கோவில் செயல் அலுவலர் முத்துசாமி மீதான முறைகேடு குறித்தும், உதவி ஆணையர்கள் தலைமையில் விசாரணை நடக்கிறது. முத்துசாமிக்கு ஆதரவாக, ஈரோடு உதவி தணிக்கை அலுவலர் ராஜாராமன் இன்னும் சில அதிகாரிகள், ஆவணங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஊழல் செய்த செயல் அலுவலர், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கையாடல் செய்யப்பட்ட பணத்தை மீட்க வேண்டும். துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை. முறைகேடு குறித்து, அறநிலையத்துறை உயரதிகாரிகளே ஒப்புதல் வழங்கியும், முறைகேட்டை மறைக்க முயல்கின்றனர். நேர்மையான அதிகாரிகளை கொண்டு விசாரிக்க வேண்டும். அதுவரை, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை மாற்றம் செய்து, தடையின்றி விசாரணை தொடர வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.