மாயம் செய்வதில் வல்ல கிருஷ்ணரை ‘மாய கிருஷ்ணன்’ என்பர். அந்த மாயனுக்கும் முன்பே மாயம் செய்தவர் வாமனர். குள்ளமாக வந்து குறுகிய கால்களால் மூன்றடி மண் தானம் கேட்ட அவர் திடீரென வானுயர வளர்ந்து பெரிய திருவடிகளால் உலகளந்தார். இதனடிப்படையில் மாயன் என்னும் பெயர் வாமனருக்கும் உண்டு. மகாபலியிடம் செய்த மாயத்தை தன்னிடம் செய்ய வேண்டும் ஆச்சாரியார் ஆளவந்தார் ஆசைப்படுகிறார். ‘‘சங்கு, சக்கர ரேகைகள் கொண்ட உமது திருவடியை என் தலை மீது வைக்கும் பேறு எப்போது கிடைக்கும்?’’ என கேட்கிறார். கோயில்களில் முதலில் பெருமாளின் திருவடியைத் தரிசித்த பிறகே முகத்தை பார்க்க வேண்டும். அவரது திருவடி பொறித்த சடாரியை தலையில் வைப்பதும் இதற்காகவே. இதனால் நம் பாவம் பறந்தோடும்.