தஞ்சாவூர், கொரோனா தடை உத்தரவுக்கு பிறகு, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் இன்று காலை திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 18ம் தேதி, தஞ்சை பெரிய கோவிலுக்குள்ளாக, பக்தர்கள் அனுமதிப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பெரிய கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பத்து வயதுக்குள் மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கோவிலுக்கு வர அனுமதி கிடையாது. மேலும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே உள்ளே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது வரக்கூடிய பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி மற்றும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து சமூக இடைவெளியை பின்பற்றி தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி அளவில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து கோவிலுக்குள் அனுமதி அளிக்கப்பட்டனர். கோவிலுக்குள் அனுமதிக்கும் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலையை மற்றும் பக்கதர்கள் கைகளை சனிடைசர் கொண்டு சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவோ, உணவு அருந்தவோ கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. சாமி தரிசனம் செய்து உடனடியாக கோவில் இருந்து பக்தர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். கடந்த 5 மாதங்களாக பிறகு பெருவுடையாரை காணும் நிலையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தனர்.