பதிவு செய்த நாள்
01
செப்
2020
02:09
தஞ்சாவூர், திருநாகேஸ்வரத்தில் ராகுதலம் எனப்போற்றப்படும் நாகநாதசுவாமிகோயிலில் இன்று ராகு பெயர்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்: திருநாகேஸ்வரத்தில், நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகுபகவான் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகுப் பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது. அதன்படி இன்று மதியம் 2.16 மணிக்கு ராகுபகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு இன்று காலை உற்சவர் ராகுபகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடும், பின்னர் மூலவர் ராகுபகவானுக்கு மஞ்சள், திரவியம், இளநீர், தேன், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மகாதீபாரதனை நடைபெற்றது. கரோனா காலமாக இருப்பதால், கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நேரத்தில் உபயதாரர்கள் மற்றும் குறைந்த அளவிலேயே பக்தர்கள் கோயிலுக்கள் அனுமதிக்கப்பட்டனர். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசி காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர்.