பதிவு செய்த நாள்
04
செப்
2020
11:09
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்களின் தரிசனத்துக்கு செய்துள்ள ஏற்பாடுகளை, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுதும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, கடந்த, 1ல் ஊரடங்கை தளர்த்தி அரசு உத்தரவிட்டது. அதன்படி, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த மூன்று நாட்களில், 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் செய்துள்ள முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்குவது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, கலெக்டர் கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.