ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 5900 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஊரடங்கினால் மார்ச் 24 முதல் தமிழகத்தில் முக்கிய கோயில்கள் மூடப்பட்டு, 161 நாட்களுக்கு பின் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டது.இதில் புனித தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர். கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராட தடை விதித்தாலும், கோயிலின் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடிய பின், முகக்கவசம் அணிந்தபடி கோயிலில் நேற்று வரை 5900 பக்தர்கள் தரிசனம் செய்து, மகிழ்ச்சியுடன் சென்றனர்.மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்குவதால், வெளி மாவட்டம், வெளிமாநிலத்திலிருந்து பக்தர்கள் வர முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் செப்.,7ல் தமிழகம் முழுவதும் ரயில், பஸ்கள் இயங்குவதால், மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க வாய்ப்பு உள்ளதால், அதற்கான முன்ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.